Tuesday, 7 August 2012

பணம்.






நாடு, வீடு என்று அனைத்தையும் ஆட்டிப் படைப்பது பொருளாதாரம் ஆகும். பொருள் ஆதாரத்தில் தான் நாடும், வீடும உலகமும் நிலை கொண்டுள்ளன. இப்பொருளாதாரத்திற்கு அடித்தளமாகத் திகழ்வதில் ஒன்று பணம். பணத்திற்கு காசு, நாணயம் என்று வேறுவேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் இப்பணத்திற்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.
பணம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் பண்டமாற்று வணிகமே நடந்துவந்தது. மக்கள் தங்களிடம் உள்ள பொருளைக் கொடுத்து அதற்கு ஏற்றாற்போல் தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். இத்தகைய பண்டமாற்று வாணிகத்தை,
‘‘கொள்வதும் குறைபடாது
கொடுப்பதும் குறைபடாது’’
என்று பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது.
பணம் புழக்கத்திற்கு வந்த பின்னர் பண்டமாற்று என்து இல்லாமற் போனது. இன்று இப்பணமே அனைத்தையும் நிர்ணயிக்கும் பொருளாக விளங்கி வருகின்றது. இப்பணத்தைப் பற்றிப் பல்வேறுவிதமான செய்திகைளப் பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். பணத்தின் தன்மை, பணம் வைத்திருப்பவனின் இயல்பு, புதிதாகப் பணம் சேர்த்தவனின் இயல்பு உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு தகவல்களை இப்பழமொழிகள் நமக்கு வழங்குகின்றன.
பணத்தின் இயல்பு
பணத்தைப் பொருள் என்றும் பொதுவாக மக்கள் குறிப்பிடுவர். பணம் வைத்திருப்பவனைப் பணக்காரன், என்றும், பெண்ணா இருப்பின் பணக்காரி என்றும் கூறுவர். இப்பணத்தைச் செல்வம் என்றும் கூறும் வழக்கும் உள்ளது. செல்வம் உடையவனைச் செல்வந்தர், செல்வந்தன் என்றும் குறிப்பிடுகின்றனர்.
அதுபோல் பணத்தின் அளவை வைத்தும் மனிதர்களுக்குப் பெயர்கள் வழங்கப்படுவது நோக்கத்தக்கது. சில லட்சங்களை வைத்திருந்தால் அவனை லட்சாதிபதி என்றும், கோடி ரூபாய்கள் வைத்திருந்தால் கோடடீஸ்வரன் என்றும் மக்கள் மனிதர்களைப் பணத்தின் அளவை வைத்துப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
பணமாகிய பொருள் முட்டாளை அறிவாளியாக்குகிறது, அறிவாளியை முட்டாளாக்குகிறது. நல்லவனைக் கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும், நீதியை, அநீதியாகவும், அநீதியை நீதியாகவும், ஒழுக்கத்தை, ஒழுக்கக் கேடாகவும், ஒழுக்கக் கேட்டை, ஒழுக்கமாகவும் மாற்றி விடுகிறது. இப்பணமாகிய பொருள் மனதனுடைய பண்பை அடியோடு மாற்றி விடுகிறது.
பணம் இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும் காட்டும் தன்மை கொண்டது. அதனால்தான்,
‘‘முட்டாப்பயலை எல்லாம் தாண்டவக் கோனே-காசு
முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே!
கட்டியழும்போது தாண்டவக்கோனே!
காசுபெட்டிமீது கண்வையடா தாண்டாவக்கோனே!’’
என்று பாடினர் போலும்.
இத்தகைய பணம் எதையும் செய்யும் வல்லமை வாய்ந்தது. மகாபாரத யுத்தத்தின் போது முதல் நாளில் தருமன் பீஷ்மரிடம் சென்று அவருடன் போரிடுவதற்கு அனுமதியும் வெற்றிபெற வாழ்த்தும் பெற வேண்டி வணங்கி நிற்கிறான். வணங்கி நின்ற தருமனைப் பார்த்த பீஷ்மர்,
‘‘தருமா மனிதன் பொருளுக்கு அடிமைப்பட்டவன். பொருள் யாரிடம் இருந்து பெறுகிறானோ அவனுக்கே அடிமையாகி அதர்மமாக இருந்தாலும் அதன் வழிச் செல்லத் தொடங்குகிறான். இதற்கு நானே உதாரணம் ஆவேன் என்பதனை உணர்ந்து கொள்வாயாக! நான் துரியோதனன் பொருளுக்கு அடிமையாகிவிட்டேன். நீ தர்மத்தின்படி போரிடு. உனக்கே வெற்றி கிடைக்கும்’’ என்று கூறி வாழ்த்தி அனுப்புகிறார். இதனையே துரோணரும் கூறுகிறார். தருமன் தர்மத்தின் வழிப்போரிட்டு முடிவில் வெற்றி பெறுகிறான். பணமாகிய பொருள் நல்லவர்களைக் கூட அதர்மத்தின்வழிச் செல்லத் தூண்டியுள்ளது மகாபாரதத்தின் வழி நமக்குப் புலப்படுகிறது.
வழக்கில் பணம் பிச்சைக்காரனிடம்கூட இருக்கிறது என்று கூறுவர். ஆம் அப்பணம் பிச்சைக்காரனைப் பெருமுதலாளியாக மாற்றிவிடுகிறது என்பதுதான் உண்மை. இத்தகைய வாழ்வியல் உண்மையை,
‘‘பணம் பத்தும் செய்யும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. ஒரே நேரத்தில் பணம் பத்துவிதமான செயல்களைச் செய்ய வைக்கும் தன்மை கொண்டது என்பதனையே இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது. மேலும் மனிதனின் பத்துவிதமான நல்ல குணங்களையும் அழியும்படி செய்துவிடும் தன்மை பணத்திற்கு உண்டு. மனிதன் பொருளுக்கு அடிமைப்பட்டவன். பொருள் மனிதனை அடிமைப்படுத்துகிறது. இப்பணம் பத்துவிதமான குற்றச் செயல்களையும், படுபாதகமான செயல்களையும் செய்ய வைக்கும் தன்மை கொண்டது என்பது இப்பழமொழி தெளிவுறுத்தும் வாழ்வியல் உண்மையாகும்.
அதுமட்டுமல்லாது இப்பணமானது நல்ல செயல்களுக்கு மட்டுமல்லாது தீயன செய்வதற்கும் காரணமாக அமைகிறது. இப்பணமானது யாரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்பவே மாறுகிறது என்பதைனையும் இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
பணம் வலிமை வாய்ந்தது. பணக்காரன் தவறு செய்தாலோ, நாணயமின்றி நடந்தாலோ அவனைவிட்டுவிடுவர். ஆனால் ஒன்றுமில்லா ஏழை தவறு செய்தால் அவன் செய்யாத தவறுகளையெல்லாம் அவன் மீது சுமத்தி அவனது வாழ்வை உருக்குலைத்து விடுவர். இதனை,
‘‘பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது
ஒன்றுமில்லாப் பஞ்சையைத்தான்
திருடனென்று ஒதைக்குது’’
என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல்வரிகள் புலப்படுத்துகின்றன. பலகோடிக் கடனை வாங்கிக் கொண்டு கட்டாது திரிந்தவனை மதிக்கின்றனர். குறைந்த அளவு கடன் வாங்கித் தொடர்ந்து பணத்தைக் கட்டிவரும்போது ஒருதவணை ஏதும் தவறிவிட்டால் அவனைத் தண்டிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையம் எடுக்கின்றனர். இதற்குப் பணமே காரணமாக அமைகிறது. இத்தகைய கருத்தினை,
‘‘ஈட்டி எட்டுனம்புட்டுத்தான்(எட்டியவரை) பாயும்
பணம் பாதாளம் வரை பாயும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
உடல் பலம் உள்ளவன் எவ்வளவு தூரம் ஈட்டியை எறிய முடியுமோ? அவ்வளவு தூரம்தான் எறிவான். ஆனால் பணக்காரன் இருந்த இடத்தில் இருந்துகொண்டே பாதாளம் வரையும் செல்வான். அனைத்தையும் பணத்தின் வாயிலாகச் சாதித்து விடுவான். அவனிடம் இருக்கும் பணத்திற்காகவே பழகுபவர் பலராக இருப்பர். இதனை,
‘‘கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் உன்னோடு’’
என்ற கண்ணதாசன் வரிகள் எடுத்தியம்புவது சிந்தனைக்குரியதாகும். பணத்தின் ஆற்றலை அதன் நிலைப்பாட்டை உணர்த்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.
பணக்கட்டு – ஜனக்கட்டு
ஒரு மனிதனுக்கு இரண்டுவிதமான பலம் தேவை. ஒன்று ஆள் பலம். மற்றொன்று பணபலம். இதில் ஏதாவது ஒன்று இருக்கும் மனிதன் வெற்றியாளனாக மாறுகிறான். இரண்டையும் மனிதன் தாமாகவே உருவாக்குதல் வேண்டும். பிறர் யாரும் உருவாக்கித் தரமாட்டார்கள். இதற்கு முயற்சி வேண்டும். இதனை,
‘‘ஒன்று ஜனக்கட்டு(ஆள்பலம்) வேண்டும்
இல்லை பணக்கட்டு(பணபலம்) வேண்டும்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.
பணபலமும், ஆள் பலமும், மனிதனின் உழைப்பினாலும், அவனது பண்பு மற்றும் செயல்களினாலும் ஏற்படுகின்றன. இதனை மனிதன் உணர்ந்து செயல்படவேண்டும் என்று இப்பழமொழி உள்ளீடாக வலியுறுத்துகிறது எனலாம்.
பணமா? குணமா?
பணம் பெரிதா? குணம் பெரிதா? இக்கேள்வி வல்லாண்டுகளாக நம்மிடையே கேட்கப்பட்டு வரக்கூடிய கேள்வியாகும். இதற்குச் சிலர் பணம் என்றும், சிலர் குணம் என்றும் இன்னும் சிலர் இரண்டும் என்றும் விடைகூறுவர். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு ஒவ்வொன்றும் பெரியது என்று கூறுவர்.
நிரந்தரமாக எது ஒரு மனிதனிடம் நிலைத்து நிற்கிறது என்பதைப் பொறுத்துத்தான் எது பெரியது என்று தீர்மானிக்கப் பெறுகிறது. பணம் பெரியது என்று நினைப்பவர்கள் அது நிரந்தரமா? என்று நினைப்பது கிடையாது. அது ஓரிடத்தில் நிலைத்து நிற்காது இடம்விட்டு இடம்சென்று கொண்டேஇருக்கும்.
பணம் படைத்தவர்களுள் சிலரே பணக்காரர்களாக நிலைத்து இருக்கின்றனர். பலர் அவர்கள் வாழ்நாள் முடிவதற்குள்ளாகவே பணத்தையும் தங்கள் செல்வாக்கையும் இழந்துவிடுகின்றனர். பணம் வைத்திருப்பவருக்காக எந்தக் கூட்டமும் கூடாது. ஏனெனில் அவரிடம் இருக்கும் பணத்திற்காகவே ஆள்கள் கூடுவர். பணம் தீர்ந்தவுடன் அவர்கள் அனைவரும் ஓடிவிடுவர். ஆனால் குணத்திற்காகப் பழகுபவர்கள் உண்மையானவர்களாக இருப்பர்.
இவர்கள் பொன், பொருள், பணம் இவற்றை எதிர்பார்த்துப் பழகமாட்டார்கள். பண்பிற்காகப் பழகுபவர்கள் இவர்கள். இவர்கள் எதற்காகவும் எப்பொழுதும் நட்புச் செய்தவர்களைவிட்டுவிட்டு ஓடமாட்டார்கள். குணமே என்றும் நிலைத்திருக்கும் எனலாம். பணம் ஒருவனைக் கைவிட்டுவிட்டாலும் ஒருவனது குணம்(பண்பு) என்றும் கைவிடாது துணைநிற்கும்.
அதுபோல் குணமுடையவன் இறந்துவிட்டால் உண்மையான அன்புடன் வருந்தித் துன்’புறுவோர் பலர். பணமுடையவன் இறந்துவிட்டால் அவனுக்காக, அவனது இறப்பிற்காக வருந்தாது அவனுடைய பணத்திற்காக மட்டுமே அழுவர். இதுவே உலக இயல்பாகும். பணத்தைத் தமக்குப் பங்கு பிரித்துக் கொடுக்காமல் சென்றுவிட்டாரே என்று புலம்பிப் பணத்தை மனதில் வைத்தே புலம்பி அழுவர். ஆனால் பண்பிற்காக, குணத்திற்காக அழுபவர் உண்மையான துன்பத்துடன் வருந்துவர். இத்தகைய உலகியல் நிகழ்வினை,
‘‘பணத்துக்கு அழுகுறியோ?
குணத்துக்கு அழுகுறியோ?’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. பணத்தைவிட குணமே சிறந்தது என்பதையும், குணம் நிலையானது, பணம் நிலையற்றது என்ற கருத்துக்களையும் இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
புதுப்பணக்காரன் செயல்
சிலர் பணம் தனக்குக் கிடைத்துவிட்டால் அவர்களின் இயல்பான தன்மை மாறிவிடும். இயல்பான நிலையிலிருந்து மாறிநடப்பர். சிலர் பண்பு மாறி பகட்டான வாழ்வினை வாழ்வர் எளிமையாக இருந்தவர் பணம் வந்தவுடன் தன்நிலை மாறி நடப்பர். இதுவேறுபட்டதாகக் காணப்படும். இத்தகையோரின் நடத்தையினை,
‘‘அற்பனுக்கு வாழ்வு வந்தா
அர்த்த ராத்திரியில குடை பிடிப்பான்’’
(வாழ்வு-பணம் வந்தால்)
‘‘கோவணத்துல ஒரு காசு இருந்தால்
கோழிகூப்புட ஒரு பாட்டு வருமாம்’’
என்ற பழமொழிகள் புலப்படுத்துகின்றன.
பணத்திற்காக அற்பத்தனமாக நடந்து கொள்பவர்கள் அதிகமான பணம் கிடைக்கப்பெற்று விட்டால் வரைமுறையின்றி நடந்து கொள்வர். தன்னிடம் பணம் இருக்கின்றது என்பதைப் பிறர் அறிந்து கொள்ள வேண்டும் என்றே அவர்களது நடவடிக்கைகள் இருக்கும். பணம் இருந்து விட்டால் நடை, உடை, பாவனை அனைத்தும் அவர்களுக்கு மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பண ஆசை

ஆசை அளவில்லாதது. கடலைவிடப்பெரியது. அதிலும் அடங்கக் கூடிய ஆசையும் உண்டு. அடங்காது வளர்ந்து கொண்டே இருக்கும் ஆசைகளும் உண்டு எனலாம். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று பண ஆசையாகும். பணம் எப்படியாவது எந்தவழியிலாவது தமக்கு வந்துசேர வேண்டும் என்று பலரும் அலைந்து வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பர். ஆனால் நிம்மதி, அமைதி இவையாவும் பணம் வந்தவுடன் நீங்கிவிடும். எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றினாற் போன்று இப்பண ஆசை,பணவெறியாக மாறி மனிதனைப் பலநிலைகளிலும தவறுகள் செய்யத்தூண்டும் எனலாம்.
பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக மனிதன் எத்தகைய செயலையும் செய்வதற்குகத் தயாராக உள்ளான். அதனால் தனக்கு இழுக்கு நேருமே என்றெல்லாம் அவன் கலைப்படுவதில்லை. எப்படியாவது பணம் வந்தால் போதும் என்றுமட்டுமே நினைக்கிறான். பணமே குறி என்று அலைகிறான். மனிதனின் இத்தகைய இழிநிலையை,
‘‘நாய் வித்த காசு குரைக்கவா செய்யும்?’’
‘‘கருவாடுவித்த காசு வீசவா செய்யும்?’’
என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. நாய்விற்றாலும், கருவாடு விற்றாலும் தமக்குப் பணம் கிடைத்தால் போதும் என்று கருதக்கூடிய பண்புடையவனாக மனிதன் உள்ளான் என்பதை இப்பழமொழிகள் புலப்படுத்துகின்றன.
மேலும் இளம் வயது முதல் முதிய வயதுவரை உள்ளோர் அனைவரும் பணத்தின் மேல் குறியாக உள்ளனர். ஒருவருக்கு உணவு கொடுத்தால் அவர் உண்டுவிட்டுப் போதும் என்று கூறிவிடுவார். மீண்டும் வேண்டும் எனக் கேட்க மாட்டார். ஆனால் பணத்தைக் கொடுத்தால் அவன் ஆசை அடங்காது. அவன் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பான். வேறுபாடின்றி மனிதர்கள் அனைவரும் பணத்தின்மீது ஆசையுடன் இருப்பர். இதனை,
‘‘பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
ஒருவன் இறந்து விட்டால் அவனது நெற்றியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைப்பர். பணத்தின் மீது ஆசையுடன் இருந்து ஆவியாய் அலைவர் என்பதற்காகப் பணத்தை சுடுகாட்டிற்குத் தூக்கிச் தூக்கிச் செல்லும்போது சில்லரைக்காசுகளைத் தூக்கி வீசிக் கொண்டே செல்வர். பணத்தின் இயல்பையும், மனிதனின் பண ஆசையையும் தெளிவுறுத்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது நோக்கத்தக்கது.
வாழ்விற்குப் பணம் தேவை. ஆனால் அதுவே வாழ்க்கையாக இராது. உப்புப் போன்றது பணம எனலாம். எணவில் அளவோடு உப்பு இருந்தால் உணவு சுவையாக இருக்கும. கூடினாலும், குறைந்தாலும் உணவு சுவைக்காது. பணமும் அதுபோன்றதே அளவோடு தேவைக்கு ஏற்றவாறு இருந்தால் பயன்மிக்கது. இல்லையெனில் மிகுந்த துயரத்தைத் தரும். இத்தகைய கருத்துக்களை நம் முன்னோர்கள் பழமொழிகளாக அமைத்துள்ளனர் எனலாம். அளவுடன் பணத்தைச் சேர்த்து மனநிறைவுடன் மகிழ்ந்து வாழ்வோம்!.

தவம் எப்படி செய்ய வேண்டும்


இங்கு பெரும்பாலும் தவம் (Thavam/Meditation) கண் மூடி செய்வது என்றே தெரிந்திருக்கிறது. ஆனால் தவம் என்பது கண்மூடி செய்வதல்ல. கண் திறந்து செய்வதே ஆகும்.
கண்ணை மூடி செய்தால் மாயைதான் விளையாடி கொண்டிருக்கும். அதனால் தான் வள்ளலார் விழித்திரு என்று சொன்னார். ஒவ்வொரு கணமும் விழித்திருக்க வேண்டும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதைத்தான் Awareness என்று சொன்னார்கள்.
மேலும் பொதுவாக நம்மிடம் ஒரு கருத்து வேறூன்றியிருக்கிறது. அதாவது இமைகளை திறந்து இருக்கும் போது புற உலகை பார்த்து கொண்டிருப்பதாகவும் மேலும் கண்ணை மூடி தவம்(Meditation) செய்யும் போது அகத்தில் உள்ளே போய் இறைவனை காண முடியும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆம், கண் திறந்து இருக்கும் போது புறக்கண் என்றும் கண்ணை மூடி இருக்கும் போது அகக்கண் என்றும் நாமாகவே நினைத்து கொண்டிருப்பதுதான் அப்பட்டமான அறியாமை!
ஆம், கண்ணை மூடி கொண்டு இருந்தால் அமைதியாக இருக்கிறது இதுவே நம்மை உள்ளே கொண்டு போய் சேர்த்து விடும் என்று நம்புவதே ஒரு மாயைதான். கண்ணை மூடி இருந்தால் அது இருட்டு, கண் திறந்து இருந்தால்தான் வெளிச்சம் (ஒளி). வேறொரு விதமாக சொல்வதானால் கண்மூடி இருப்பது என்பது அமாவாசை கண் திறந்து இருப்பது என்பது பெளர்னமி. பெளர்னமி அன்று கிரிவலம் சுற்றுவதுதான் சால சிறந்தது என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். இப்படி ஞானமடைய எப்படி தவம் செய்ய வேண்டும் என்பதைத்தான் பக்தியில் சொல்லி வைத்தார்கள்.
கண்ணை திறந்து செய்ய வேண்டும் என்று சொல்லியாயிற்று. எப்படி என்பதை திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்.
“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம”

திருமந்திர பாடல் – 2816
இவர்கள் ஏற்றி கொண்ட விளக்கு ஒரு ஞான குருவால் தூண்டி விடப்பட்ட விளக்கு தான். சிலர் குரு இல்லாமல் அடைந்து விடலாம் என்று பொதுவில் பேசி வருகிறாகள் ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று. குரு சுட்டி காட்டாத வித்தை பாழ் என்பதை கேள்விபடாதவ்ர்களே இப்படி பேசுபவர்கள். கண்ணப்ப நாயனார் போன்று இருப்பவர்களுக்குதான் குரு தேவையில்லை என்று சொல்லலாமே தவிர மற்றவர்களுக்கு இல்லை. நாம் கண்ணப்ப நாயனாரா இல்லையா என்பதை அவரவர் மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும்.
ஒரு சற்குரு நம் மெய்பொருளில் (அ) திருவடியில் சுட்டி காட்டினால்தான் இந்த ஞான தவம் செய்ய முடியும். மேலும் அப்பொழுதுதான் நமது புறக்கண் அகக்கண்ணாக மாறுவதற்க்கான முதல் படி மேலும் தொடர்ந்து சீடன் தவம் செய்ய செய்யவே அது அகக்கண்ணாக மாறும். இதுதான் அகக்ண்ணே தவிர மற்றது அல்ல. ஆம், கண்ணை மூடி கொண்டு இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது எல்லாம் அகக்கண் இல்லை. கண்ணை மூடிட்டான் என்று சொன்னாலே தமிழில் அது செத்தவனைத்தான் குறிக்கும் என்பதை சிந்தித்து தெளிக!விழித்திரு என்பது இதுவே!

கண்ணை திறந்து செய்ய வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக இங்கு சொல்லவில்லை. ஏன் திறக்க வேண்டும்? எப்படி திறக்க வேண்டும்? மேலும் நமது மெய்பொருளில் (அ) திருவடியில் ஒளிந்திருக்கும் ஞான இரகசியங்கள் எல்லாம் எங்கள் தளத்தில் வெட்ட வெளிச்சமாக போட்டிருக்கிறோம். மேலும் வெளிச்சம் ஆக்குவோம்.
நமது திருவடியான மெய்பொருளின் தன்மை அதனுள் ஒளிந்திருக்கும் சூட்சுமங்கள் அனைத்தும் தெரிய வேண்டும். தெரிந்தால்தான் கண்ணை திறந்து எப்படி சும்மா இருக்க முடியும் என்பது தெரியும்! ஞான தவம் என்பது ஒன்றும் அல்ல! சும்மா இருப்பதுதான். ஆம், எல்லா ஞானிகளும் சும்மா இருந்தே சுகம் பெற்றார்கள். சும்மா இருப்பது எப்படி என்றால் முதலில் திருவடி (மெய்பொருள்) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
புத்தகங்கள்:
மரணமிலா பெருவாழ்வு பற்றி இரண்டு புத்தகங்கள் இந்த தளத்தில் இருக்கிறது. மேலும் இங்குள்ள சில கட்டுரைகளை படித்தால் தெளிவு பெறலாம்!
இந்த புத்தகங்கள் எங்கள் குருநாதாரால் எழுதபட்டது. அனைத்து ஞான ரகசியங்களும் இதில் வெளிபடுத்தபட்டிருக்கிறது. இந்த இரண்டு புத்தகங்கள் போதும் தவம் பற்றிய அனைத்து விஷயஙகளையும் சொல்லிவிடும். இதை தவிர திருவருட்பா, திருவாசகம், திருமந்திரம்ஆகியவற்றிற்க்கு அற்புதமான ஞான விளக்கங்கள் எமது குரு நாதரால் எழுத பட்டிருக்கிறது வேண்டியவர்கள சபையை தொடர்பு கொண்டு வாங்கி படிக்கலாம்.

நன்பேண்டா.,,,,


நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.
பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.

நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

கல்வி என்பது எதற்கு?


நமது அடிப்படை கல்வி   அமைப்பையே அவமதிக்கும் வகையில் புது வருடத்தன்று நமது மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். இது ஒன்றும் ஒரே இரவில் நிகழவில்லை. பல வருடங்கள் அடக்கி ஆளப்பட்டதால் திரண்ட ஆவேசம்தான்.
மனித உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளையே அம்மாணவர்கள் கோரினர். இனியும் சக்கரத்தின் பற்களில் மாட்டி கிழிபட அவர்கள் விரும்பவில்லை. இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி வெளியிட்ட கருத்தை செம்பருத்திற்காக மொழியாக்கம் செய்துள்ளார் யுவராஜன்.
கல்வியில் அடிப்படை தேடலே உண்மையை அறிவதாகும். உண்மையை அறிவதன்பதே அர்த்தபூர்வமான செயல்முறைகளாலும் நுண்ணாய்வின் பிரதிபலிப்பாகவும் உள்ளதென புரிந்து கொள்ளலாம்.
இது சில நேரம் எளிதான செயல்முறையாக இருப்பதில்லை. பல நேரங்களில் குழப்பங்களையும் ஏமாற்றங்களையும் தரவல்லது. மிகவும் அரிதான் கணங்களில் மட்டுமே உண்மை நேரடியாக புரிந்து கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
ஆனால் இத்தகைய உண்மையை தேடும் கல்வி வெறும் மனப்பாடம் செய்தல், குருட்டுத்தனமான அடிபணிதல் போன்ற கல்விமுறையிலிருந்து நிச்சயம் வேறுப்பட்டதுதான். உண்மையான கல்வியைக் கற்க விரும்பும் மாணவன் திறந்த மனதுடன், ஆர்வத்தோடு தேடுபவராகவும் அனைத்து சிந்தனைகளை கேள்வி எழுப்புவராகவும் இருப்பார்.
இறுதியில் சரியான தீர்வு வெளிப்படும்போது நல்ல பலனைத் தருவதாக இருக்கும். நாம் உண்மையை அறிய கடந்த வந்த பாதையைத் திரும்பி பார்க்கும்போது நாம் எத்தகைய சிந்தனை திறன் கொண்டவர் என்பதை அறியலாம்.
கல்வி பெறுவது வெறும் சமுக உரிமை மட்டுமல்ல, இயல்பிலேயே தனித்துவமானதுதான். ஆகவே கல்வி குறித்த செயல்பாடுகளை அறிஞர்களே கருத்துகளை சொல்வது முக்கியம்.
இதனால்தான் கல்வி பயில்வதில் சுதந்திரம் மிக அவசியம். இறுதியில் சிறந்த கல்வி கற்றவர்கள் உருவாகுவதே முக்கியம். சிறந்த கல்வியால் சிறந்த வேலை வாய்ப்பையும் வெளிநாட்டு முதலீடுகளையும் கவரலாம். (ஆனால் இதில் மட்டுமே பெரும் முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவது வருத்தமான விடயம்தான்.) நம்மை மனிதர்களாக மாற்றும் கல்வி நமக்கு ஒரு சொத்துதான்.
அழுத்தப்படுபவர்களுக்கான கல்வியலில் பாவ்லோ ப்ரே கூறுவது என்னவென்றால் ‘ சுதந்திரம் என்பது மனிதனின் புறத்தில் இருப்பதோ அல்லது மாயையானதோ கிடையாது. மாறாக மனித வாழ்வை முழுமை அடையச் செய்யும் இன்றியமையாத தேடலாகும்.
மாணவர்களை வெறும் மனபாடம் செய்திருக்கும் தகவல்களைக் கொண்டு மட்டும் அளவிட கூடாது. மாறாக திறந்த மனதுடன் அறிந்து கொள்ளும் ஆர்வமும் அறிவார்ந்த தெளிவும் வளர்ச்சியும் – இதன் மூலம் சிறந்த அறிவார்ந்த உரையாடல்களை ஏற்படும். இத்தகைய அறிவார்ந்த பண்புகள் வளர நாம் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. மாறாக தேடல்  கொண்ட மாணவர்களே அதை இயல்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நமது உலகலாவிய பார்வை இன்னும் வலுப்ப்படுவதும் அதன் ஊடாக உண்மையான குடிமை சமூகம் உருவாகுவதும் இதை ஒட்டியே உள்ளது.
மலேசியாவின் கல்வி அமைப்பு
நமது அடிப்படை கல்வி   அமைப்பையே அவமதிக்கும் வகையில் புது வருடத்தன்று நமது மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். இது ஒன்றும் ஒரே இரவில் நிகழவில்லை. பல வருடங்கள் அடக்கி ஆளப்பட்டதால் திரண்ட ஆவேசம்தான்.
மனித உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளையே அம்மாணவர்கள் கோரினர். இனியும் சக்கரத்தின் பற்களில் மாட்டி கிழிபட அவர்கள் விரும்பவில்லை.
கல்வி அமைப்பில் கூறுபடுவதை விடுத்து உண்மையில் நமது உயர்க்க;ல்வி நிலையங்கள் எப்படி கற்றலுக்கு உகந்த பாதுகாப்பான இடமாக இல்லாமல் இருப்பதை அன்று மீண்டும் நமக்கு நிறுவியுள்ளனர். அவை வெறும் அரசின் பிரச்சார ஊதுகுழலாகவும் அதிகார அமைப்பாகவும் உள்ளன.
AUKU சட்டத்தால் தொடர்ந்து அடக்குமுறை செய்வதோடு அல்லாமல் கடந்த ஞாயிறன்று மாணவர்களின் எதிர்ப்புகளை கடுமையாக அடக்கியதால் அரசு தன் அடக்குமுறையை மீண்டும் மெய்பித்துள்ளது. அரசு தன்னை அடக்குமுறையாளராக நிலைநிறுத்தி கொண்டுள்ளதோடு ( அப்படி இருப்பதில் எவ்வித குற்ற உணர்ச்சியும் அதற்கு இருந்ததில்லை) எவ்வித ஆபத்துமில்லாத தன் குடிமக்களின் மீதே வெட்கமில்லாமல் வன்முறையை ஏவவும் தலைப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணியின் கருத்து
இளைஞர்களை உரிமையை நிலைநிறுத்தும் அமைப்பாக , இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி மாணவர்களுக்கு எதிராக புது வருடத்தன்று நிகழ்த்தப்பட்ட தாக்குதலை எண்ணி வருந்தவும் கடுமையாக கண்டிக்கவும் செய்கிறது.
நமது மாணவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அவமதிப்பை மலேசியாவிலுள்ள அனைவர் மீதும் நடத்தப்பட்ட அவமதிப்பாக நாங்கள் கருதுகிறோம். நாம் விரும்புவதெல்லாம் முற்போக்கான மக்களாட்சி கொண்ட சமூகத்தை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் அனைத்து பல்கலைக்கழகங்களையும் அதன் இருப்பின் நோக்கமான புதிய கண்டுபிடிப்புகளையும் ஆய்வுகளையும் முன்னெடுக்கும் தளமாக இருப்பதை வலியுறுத்துகிறோம். அதனால் மட்டுமே வளர்ச்சியும் மாற்றங்களையும் கொண்ட குடிமை சமூகம் உருவாகும்.
நம் மாணவர்களின் ஆய்வுகளுக்கு தேவையான வசதிகளையும் உதவிகளையும் ஏற்படுத்தி நம் பல்கலைக்கழகங்கள் அறிவார்ந்த மாணவர் சமூகத்தை உருவாக்க நம் பல்கலைக்கழகங்கள் உதவ வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் நம் மலேசிய அரசியலில் குறித்து பொறுப்பும் உய்யச் சிந்தனை கொண்ட  மாணவர்களை உருவாக்கலாம்.
ஒரு பக்கம் உலகத் தரவரிசையில் முன்னணி வர முயன்றும் மறுபுறம் மாணவர்களுக்கு எதிராக வன்முறையும் நிகழ்த்தும் பாராபட்ச நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் நிறுத்த வேண்டும்.
தங்கள் அதிகாரத்தைக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி கடனுதவிகளை வழங்கும் பெரிய மனதைப் பார்த்து அவர்களின் கல்வி குறித்த முக்கியத்துவத்தை உணர்கிறோம். ஆனால் அதற்கு மாற்றான ‘பெரிய மனதை’ மாணவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது தவறாகும்.
இதனால் அவர்கள் மாணவர்களுக்கு ஏதோ பெரிய உதவி செய்வதாக காட்டுவது சரியல்ல. உண்மையில் இது அவர்களின் கடமையாகும். தரமான கல்வி ஒரு மானுட உரிமையாகும். இதற்கு நாம் யாரின் ‘பெரிய மனதையும்’ இரந்து பெற தேவையில்லை.
ஹடிசில் முகமது நபி அவர்கள் சொன்னது ‘ தவறு செய்யும் அரசனுக்கு முன் உண்மையை மட்டுமே பேச வேண்டும்’ . கடந்த ஞாயிறன்று மலேசிய அத்தகு புனித செயலை காணும் வாய்ப்பை பெற்றது.